Wednesday, September 29, 2010

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 02

கர்மா என்பது ஒரு செயலிற்க்கான‌ காரண காரிய தொடர்புகளைக் (causal  relationship)குறிக்கும் விதியாகும். கர்மாவின் செயற்ப்பாடு வெறுமனே எழுந்தமானமாக எதேச்சையாக நடப்பதில்லை, அச்செயற்ப்பாடு பிரபஞ்சத்தின் மாறாத விதியின் (Universal Law) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் கூறுவதானால் எந்த நாட்டில், யாருக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எம்மிடத்தில் இல்லை, ஆனால் பிறந்தபின் எமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதன் படி செய்ய எமது இச்சா சக்தி இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இச்சாசக்தியினால் தேர்ந்தெடுக்கும் எந்தக்காரியத்திற்க்கான விளைவுகளும் அவனால் மறுக்கமுடியாது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகிறது.

இதன்படி கர்ம விஞ்ஞானம் மூன்றுவிதமான கர்மங்களை மனிதனிற்க்கு வழங்கிறது. 1)சஞ்சித கர்மா(Gross total Karma):நல்லதும், கெட்டதுமான பலன்களை வழங்குவதற்காக எமது ஆழ்மனத்தில் சேர்ந்துள்ள மொத்தப் பதிவுகள் சஞ்சித கர்மா எனப்படும் 2) பிரார்த்த கர்மா(working karma):இது சஞ்சித கர்மத்திலிருந்து இந்தப்பிறப்பில் எமக்கு பலன் தரக்காத்திருக்கும் நல்லதும் கெட்டது கலந்த செயற்படு கர்மா.3)கிரியமன கர்மா(Accumulating Karma by this birth):புதிதாக இப்பிறப்பில் நாம் சேர்த்துக்கொண்ட, சேர்த்துக்கொண்டிருக்கின்ற, சேர்த்துக்கொள்ளப்போகின்ற கர்மா.

இவற்றில் சஞ்சித கர்மாவும் கிரியமன கர்மாவும் எமது நல்ல, கெட்ட செயல்களின் மூலம் மாற்றப்படக்கூடியவை. ஆனால் பிரார்த்த கர்மத்தின் பலன்கள் மாற்றப்படமுடியாதவை. இது இப்பிறப்பிலேயே அனுபவித்து தீர்க்கப்படவேண்டியவை.இக்கர்ம விதி புத்ததர்மத்தின் கர்மவிதியிலிருந்து வேறுபட்டது. இக்கர்மவிதி மனிதனிற்க்கு செயல் புரியும் உத்வேகத்தினை வழங்குகிறது. அதாவது எமது வாழ்க்கை முழுமையாக ஒரு திடமான திட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. எமது இச்சாக்தியினை(free will) முழுமையாக பிரயோகிக்கும் சுதந்திரத்தினை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதற்குரிய பலன்களைப் பெறும் அளவுகள் (அதாவது வேலைக்குத்தகுந்த கூலி)பிரார்த்த கர்மாவினால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னொரு உதாரணம் மூலம் இதனை விளங்க முயற்சிப்போமானால், ஒரு கம்பனியின் ஆண்டிறுதிக்கணக்கு Annual accounts) போன்றது ஒருவரது ஜாதகம், சென்ற வருட வரவு செலவு கணக்கில் இவ்வளவு இலாபம், நஷ்டம், இவ்வளவு இருப்பு என வருவது போன்று ஒரு நபர் பிறந்தவுடன் அவரது கடந்த பிறப்புகளில் உள்ள தரவுகள், அவரது ஆற்றல்கள், அவரது இருப்பு மீதி (Balance) என்பன தீர்மானிக்கப்படுகிறது. இருக்கும் மீதிக்குத்தக்க அவரது இச்சாசக்தியினூடாக தனது அடுத்த வருடத்திற்குரிய அல்லது பலவருடங்களுக்குரிய வருமானத்தினை திட்டமிட்டு தீர்மானித்து அடைந்துகொள்ளலாம். அதுபோல் தனது இப்பிறப்பின் செயல்கள் மூலம் பழைய இலாப ந‌ஷ்டங்களாகிய பிரார்த்த கர்மங்களையும் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜோதிடம் இவற்றில் எதற்க்கு பயன்படும்? ஜோதிடம் ஒருமனிதனின் வாழ்க்கைக்கான கணக்கியல், கணக்கியலில் ஒவ்வொரு பிரச்சனைகளை ஆராய்வதற்க்கு ஒவ்வொரு ஆய்வுமுறை இருப்பது போன்று ராசிச்சக்கரம் ‍- ‍ பொதுக்கணக்கு, நவாம்சம் - திருமணத்திற்கான கணக்கு, சப்தாம்சம் - பிள்ளைகள், தசாம்சம் - தொழில், துவாதசம்சம் - பெற்றோர் என பல கணக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

பிரார்த்த கர்மம் ராசிச்சக்கரத்தில் உள்ள கிரகங்கள் மூலம் அறியப்படுகிறது. இதன்படி ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவுள்ள செயல்கள் திசாபுத்தியுடன் கணிக்கப்படுகிறது. இக்கர்மம் நிச்சயமாக நடைபெறவிருப்பது, எமது இச்சாசக்தியின் மூலம் தடை செய்யமுடியாதது, அனுபவித்து தீர்க்க வேண்டியது. 

மற்றைய இரு கர்மாக்களான சஞ்சிதம், கிரியமன கர்மாக்கள் தற்போதைய கிரக நடப்புகளின் படி ஒருவரிற்க்கு பலன் தரக்காத்திருப்பவை, இவை எமது இச்சாசக்தியின் மூலம் மாற்றக்கூடியவை. இது எப்படியென்றால் எம்மிடம் கையிருப்பு ஒரு இலட்சம் என்றால் எமது எமது வியாபார தந்திரத்தின் மூலம் பத்துஇலட்ச வியாபாரத்தினை வெற்றிகரமாக முடித்தல் போன்றது, இதற்க்கித்தான் வலிமையான இச்சாசக்தி அவசியமாகிறது.

ஆக ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையுடன் கேட்டுவிட்டு தனக்கு இதுதான் விதி என சுயமுயற்சி அற்றிருப்பவர்களுக்கோ, அல்லது தனக்கு கோடீஸ்வர யோகம் இருப்பதால் கோடி கோடியாக பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஜோதிடம் எவ்விதத்திலும் பயன்பட்டது. யார் தனது வாழ்க்கையைபற்றி முழுமையான அறிவு பெறவிரும்புகிறார்களோ, திட்டமிட விரும்புகிறார்களோ அவர்களுக்குரிய ஆய்வுத்தரவு தான் ஜாதகம், ஆய்வுமுறைதான்‍ ஜோதிடம்.

3 comments:

ravikumar said...

I trust Astrology but as per our Karma only we get birth in a family with Plus & minus. I agree. My question is I do not want to follow / read Horoscope but if i pray God (Namavali Ashthothram) daily basis or chanting Slogas daily in the name of God , let it be Shiva/vishnu/Ambigai will it reduce my hurdles in my life? Like "Saranagathi Philosophy"
kindly explain to my personal id about this

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

அன்புள்ள ரவி,

தங்கள் கேள்விக்கான பதிலினை ஒருபதிவாகவே எழுதலாம், எழுதுவேன் காத்திருங்கள். தங்களது அபிப்பிராயத்திற்கான பதில், நிச்சயமாக உங்கள் மனவலிமையினைக் குலைக்கும் ஜோதிடரிடம் சென்று ஜோதிடம் கேட்பதை விட நீங்கள் கூறுவது போன்று இறைவழிபாடுகள் மூலம் உங்களுக்கு ஏற்படும் விளைவுக‌ளை தவிர்க்கலாம், ஆனால் அது நீங்கள் குறிப்பிடுவது எந்த வகையான சரணாகதித்தத்துவம் என்பதைப் பொறுத்தது, அபிஷேகம் செய்து,தேங்காய் உடைத்து, ஐயரிற்கு தட்சணை வைக்கும் வெளிச்சடங்கல்ல. உள் மனம் விழிப்படைய உங்கள் இச்சாசக்தியினை ஒருமுகப்படுத்தி தன்னிலை ஹிப்னாடிசம் போன்ற இறை சாதனையினால் நீங்கள் பலன் பெறலாம். இது பற்றி வாசகர்கள் பலர் வேண்டும் சந்தர்ப்ப‌த்தில் எழுதலாம் என்று உள்ளேன்!

நன்றி

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

ரவி, உங்களுக்கான பதில் வெகுவிரைவில் ஜோதிடம்‍ கர்ம விஞ்ஞானம் இறைவழிபாடு என்ற பதிவில் முழுமையான விளக்கத்துடன் பதியப்படும்

சுமன்

Post a Comment