Thursday, September 30, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 02

நான்காவது அடிப்படை ராசிச்சக்கரம்: இது குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்கள் எந்த ராசியில் நிற்கின்றது என்பதையும் லக்கினத்தினை சார்பாக வைத்து வீடுகளையும் குறிப்பதாக வரைபு படுத்தப்படும் சக்கரமாகும். இந்திய ஜோதிட முறையில் மூன்றுவிதமாக இந்த ராசிச்சக்கரம் வரைபு படுத்தப்பட்டாலும் நாம் இப்பதிவுகளில் தென்னிந்திய முறையில் பயன்படுத்தப்படும் ராசிச்சக்கரம் மட்டுமே ஆராயப்படுகிறது. இச்சக்கரம் பாவத்தினை அடிப்படையாகக் கொண்டது. 


ஐந்தாவது அடிப்படை வர்க்கச்சக்கரங்கள்:
சாதாரணமாக ராசிச்சக்கரத்தினை உருவாக்கும் போது ஒரு கிரகம் எந்த ராசியில் நிற்கிறது என்பதினை அகலாங்கினைக் கொண்டு கணிப்போம், இதற்கு மேலதிகமாக ராசிகளை 2,4, 6 எனப்பகுதிகளாக பிரிப்பதன் மூலம் வர்க்கச்சக்கரங்கள் உருவாக்கப்படுகின்றது. இவ்வொவொரு சக்கரங்களும் வாழ்க்கையின் ஒவ்வொருபகுதி பற்றிய புதிரினை விளக்குகிறது.

ஆக மேலே விளக்கப்பட்டதின் படி இந்திய ஜோதிடம் 
  1. கிரகங்கள் 
  2. ராசிகள் 
  3. பாவம் அல்லது வீடுகள் 
  4. வர்க்கச்சக்கரங்கள் என்ற முக்கியமான நான்கு தூண்களால் ஆக்கப்பட்டுள்ளது.

ஆறாவது அடிப்படை நட்சத்திரங்களும் பாதங்களும்:
ராசிமண்டலம் பன்னிரண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளதென முன்னர் பார்த்தோம். இது மேலும் 27 சமபிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் நட்சத்திரம் எனப்படுகிறது. கணித ரீதியில் ஒவ்வொரு நட்சத்திரமும் 360º/27 = 13º 20 அளவு உடையதாகிறது. மேலும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கணிதரீதியாக இது 3º 20'அளவுடையது. இதனை பாதம்/கால் எனக்குறிப்பிடுவர். கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரும்,அவற்றின் அளவு, உள்ள ராசி, அதிதேவதை மற்றும் விம்சோத்ரி தேவதைகளும் தரப்பட்டுள்ளது.

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 01

கிரகங்கள் பூமியிற்கும் நட்சத்திரங்களுக்கும் சார்பாக‌ வானத்தில் சுழல்கின்றன, இவை பூமியில், மனிதனின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறப்போகின்ற சம்பவங்களுக்கான குறிகாட்டிகளாக செயற்படுகின்றன என்பது தான் ஜோதிடத்தின் அடிப்படை. இந்த அடிப்படையினைக் கொண்டு பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தப்பதிவுகள் பாரத தேசத்தைச் சார்ந்து வளர்ந்த ஜோதிடக்கலையினைப் பற்றியே அதிகம் பேசப்போகிறது.

இந்திய ஜோதிடக்கலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதன் படி பல நுணுக்கமான கணிதங்கள் அச்சொட்டாக வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டக்கூடியவாறான விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது அடிப்படை: கிரகங்கள்
, வானியலில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் ஜோதிடத்தில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் வேறு அர்த்தம் கொண்டவை. புதன் தொடக்கம் யுரேனஸ் வரையிலான சூரியனைச் சுற்றிவருவனவே வானியலில் கிரகங்கள் எனப்படுகின்றன. ஆனல் ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய ஏழுமே கிரகங்கள். இவற்றுக்கு மேலதிகமாக ராகு, கேது என்பன நிழல் கிரகங்கள் கருதப்படுகின்றன. இவை உண்மையில் கணிதப் புள்ளிகள், ஆக மொத்தம் ஒன்பது கிரகங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.

இதுதவிர 11 உபகிரகங்களாக ஒருசில கணிதப்புள்ளிகள் காணப்படுகின்றன. லக்கினம் என்பது பூமிசுழலும் போது எந்தப்புள்ளி கிழக்கு நெட்டாங்கில் வானத்தில் எந்த ராசியினைப் பார்த்து நிற்கிறதோ அப்புள்ளி லக்கினம் எனப்படும். இது தவிர சில கணிதப்புள்ளிகள் விஷேட லக்கினங்கள் எனப்படுகிறது. 

இரண்டாவது அடிப்படை இராசி:
மேற்குறிப்பிட்ட கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பன நட்சத்திர மண்டலத்தில் பாகை, கலை, விகலை என குறித்த ஒரு மாறாப்புள்ளியினை கருதி கணிக்கப்படுகின்றது. இப்புள்ளியினை பூமத்திய புள்ளி என அழைக்கலாம். இப்புள்ளியிலிருந்து கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பனவற்றின் இருப்பைக்குறிப்பிட அகலாங்கு அல்லது ஸ்புடம் எனும் சொல் பாவிக்கப்படுகிறது. பூமியின் சார்பாக வானத்தில் காணப்படும் எந்தவொரு கிரகத்தின் இருப்பும் 0°0'0'' (0 degrees 0 minutes 0 second) தொடக்கம் ‌ 359°59'59'வரையில் காணப்படும். 0°0'0''எனபது ராசிமண்டலத்தின் தொடக்கமாகும். மேற்க்கத்திய முறையில் சாயன ராசிமுறை அதாவது நகரும் ராசிமண்டலமும், இந்திய ஜோதிடத்தில் நிராயன ராசி முறை அதாவது நகராத ராசிமண்டலமும் பயன்படுத்தப்படுகிறது. 

மேற்க்குறிப்பிட்ட வானத்தில் உள்ள ராசி மண்டலம் 360 பாகைகளால் ஆனது, அவற்றை சரிசமனாக 12 பகுதிகளாக பிரிப்பதன் மூலம் ராசிகள் பெறப்படுகின்றது.

கீழே உள்ள அட்டவணையில் 12 ராசிகளுக்குமுரிய ஆங்கில, தமிழ் பெயர்களும் அவை அடங்கும் பாகைகளும் தரப்பட்டுள்ளது. 


உதாரணமாக செவ்வாய் 221°37" பாகையில் இருப்பதாக கருதின் இந்த அட்டவணையின் மூலம் விருட்சிக‌ ராசியில் இருக்கின்றது எனக்கண்டுபிடிக்கலாம்.  

மூன்றாவது அடிப்படை பாவம்: இதனை தமிழில் கூறுவதானால் வீடு எனக்கூறலாம். ஒரு ஜாதகத்தினை எடுத்துக்கொண்டால் வீடுகள் குறித்த சார்புப் புள்ளிகளான லக்கினம், சந்திர லக்கினம், விஷேட லக்கினம் என்பவற்றினூடாக ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். லக்கினம் முதலாவது வீடாகக் கொண்டு 1 தொடக்கம் 12 வீடுகள் ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். உதாரணமாக துலா லக்கினம் எனின் இரண்டாவது வீடு விருச்சிகம், மூன்றாவது வீடு தனுசு என பன்னிரண்டாவது வீடு கன்னியாக ராசிச்சக்கரம் முடிவுறும். இந்த ஒவ்வொரு வீடும் வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தினைக் குறிக்கின்றது. இதுபற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் அடுத்த பதிவிலும் தொடரும் ......

Wednesday, September 29, 2010

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 02

கர்மா என்பது ஒரு செயலிற்க்கான‌ காரண காரிய தொடர்புகளைக் (causal  relationship)குறிக்கும் விதியாகும். கர்மாவின் செயற்ப்பாடு வெறுமனே எழுந்தமானமாக எதேச்சையாக நடப்பதில்லை, அச்செயற்ப்பாடு பிரபஞ்சத்தின் மாறாத விதியின் (Universal Law) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் கூறுவதானால் எந்த நாட்டில், யாருக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எம்மிடத்தில் இல்லை, ஆனால் பிறந்தபின் எமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதன் படி செய்ய எமது இச்சா சக்தி இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இச்சாசக்தியினால் தேர்ந்தெடுக்கும் எந்தக்காரியத்திற்க்கான விளைவுகளும் அவனால் மறுக்கமுடியாது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகிறது.

இதன்படி கர்ம விஞ்ஞானம் மூன்றுவிதமான கர்மங்களை மனிதனிற்க்கு வழங்கிறது. 1)சஞ்சித கர்மா(Gross total Karma):நல்லதும், கெட்டதுமான பலன்களை வழங்குவதற்காக எமது ஆழ்மனத்தில் சேர்ந்துள்ள மொத்தப் பதிவுகள் சஞ்சித கர்மா எனப்படும் 2) பிரார்த்த கர்மா(working karma):இது சஞ்சித கர்மத்திலிருந்து இந்தப்பிறப்பில் எமக்கு பலன் தரக்காத்திருக்கும் நல்லதும் கெட்டது கலந்த செயற்படு கர்மா.3)கிரியமன கர்மா(Accumulating Karma by this birth):புதிதாக இப்பிறப்பில் நாம் சேர்த்துக்கொண்ட, சேர்த்துக்கொண்டிருக்கின்ற, சேர்த்துக்கொள்ளப்போகின்ற கர்மா.

இவற்றில் சஞ்சித கர்மாவும் கிரியமன கர்மாவும் எமது நல்ல, கெட்ட செயல்களின் மூலம் மாற்றப்படக்கூடியவை. ஆனால் பிரார்த்த கர்மத்தின் பலன்கள் மாற்றப்படமுடியாதவை. இது இப்பிறப்பிலேயே அனுபவித்து தீர்க்கப்படவேண்டியவை.இக்கர்ம விதி புத்ததர்மத்தின் கர்மவிதியிலிருந்து வேறுபட்டது. இக்கர்மவிதி மனிதனிற்க்கு செயல் புரியும் உத்வேகத்தினை வழங்குகிறது. அதாவது எமது வாழ்க்கை முழுமையாக ஒரு திடமான திட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. எமது இச்சாக்தியினை(free will) முழுமையாக பிரயோகிக்கும் சுதந்திரத்தினை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதற்குரிய பலன்களைப் பெறும் அளவுகள் (அதாவது வேலைக்குத்தகுந்த கூலி)பிரார்த்த கர்மாவினால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னொரு உதாரணம் மூலம் இதனை விளங்க முயற்சிப்போமானால், ஒரு கம்பனியின் ஆண்டிறுதிக்கணக்கு Annual accounts) போன்றது ஒருவரது ஜாதகம், சென்ற வருட வரவு செலவு கணக்கில் இவ்வளவு இலாபம், நஷ்டம், இவ்வளவு இருப்பு என வருவது போன்று ஒரு நபர் பிறந்தவுடன் அவரது கடந்த பிறப்புகளில் உள்ள தரவுகள், அவரது ஆற்றல்கள், அவரது இருப்பு மீதி (Balance) என்பன தீர்மானிக்கப்படுகிறது. இருக்கும் மீதிக்குத்தக்க அவரது இச்சாசக்தியினூடாக தனது அடுத்த வருடத்திற்குரிய அல்லது பலவருடங்களுக்குரிய வருமானத்தினை திட்டமிட்டு தீர்மானித்து அடைந்துகொள்ளலாம். அதுபோல் தனது இப்பிறப்பின் செயல்கள் மூலம் பழைய இலாப ந‌ஷ்டங்களாகிய பிரார்த்த கர்மங்களையும் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜோதிடம் இவற்றில் எதற்க்கு பயன்படும்? ஜோதிடம் ஒருமனிதனின் வாழ்க்கைக்கான கணக்கியல், கணக்கியலில் ஒவ்வொரு பிரச்சனைகளை ஆராய்வதற்க்கு ஒவ்வொரு ஆய்வுமுறை இருப்பது போன்று ராசிச்சக்கரம் ‍- ‍ பொதுக்கணக்கு, நவாம்சம் - திருமணத்திற்கான கணக்கு, சப்தாம்சம் - பிள்ளைகள், தசாம்சம் - தொழில், துவாதசம்சம் - பெற்றோர் என பல கணக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

பிரார்த்த கர்மம் ராசிச்சக்கரத்தில் உள்ள கிரகங்கள் மூலம் அறியப்படுகிறது. இதன்படி ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவுள்ள செயல்கள் திசாபுத்தியுடன் கணிக்கப்படுகிறது. இக்கர்மம் நிச்சயமாக நடைபெறவிருப்பது, எமது இச்சாசக்தியின் மூலம் தடை செய்யமுடியாதது, அனுபவித்து தீர்க்க வேண்டியது. 

மற்றைய இரு கர்மாக்களான சஞ்சிதம், கிரியமன கர்மாக்கள் தற்போதைய கிரக நடப்புகளின் படி ஒருவரிற்க்கு பலன் தரக்காத்திருப்பவை, இவை எமது இச்சாசக்தியின் மூலம் மாற்றக்கூடியவை. இது எப்படியென்றால் எம்மிடம் கையிருப்பு ஒரு இலட்சம் என்றால் எமது எமது வியாபார தந்திரத்தின் மூலம் பத்துஇலட்ச வியாபாரத்தினை வெற்றிகரமாக முடித்தல் போன்றது, இதற்க்கித்தான் வலிமையான இச்சாசக்தி அவசியமாகிறது.

ஆக ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையுடன் கேட்டுவிட்டு தனக்கு இதுதான் விதி என சுயமுயற்சி அற்றிருப்பவர்களுக்கோ, அல்லது தனக்கு கோடீஸ்வர யோகம் இருப்பதால் கோடி கோடியாக பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஜோதிடம் எவ்விதத்திலும் பயன்பட்டது. யார் தனது வாழ்க்கையைபற்றி முழுமையான அறிவு பெறவிரும்புகிறார்களோ, திட்டமிட விரும்புகிறார்களோ அவர்களுக்குரிய ஆய்வுத்தரவு தான் ஜாதகம், ஆய்வுமுறைதான்‍ ஜோதிடம்.

Tuesday, September 28, 2010

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 01

ஜோதிடத்தின் செயன்முறையினை விளங்க‌ கம்பியூட்டரினை ஒரு உதாரணமாக எடுத்து விளங்க முற்படுவோமானால் இதில் இரண்டு முக்கியமான பாகங்கள் காணப்படுகின்றது. ஒன்று  வன்பொருள் மற்றையது அதனை இயக்கும் மென்பொருள். வன்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது பௌதிகப் பொருட்க்களால், மென்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது "ப்ரோகிராமிங் லாங்குவேஜ்" எனப்படும் மொழிகளினால். இந்தப் ப்ரோகிராமிங்கிற்குரிய திட்டம் பயன்படுத்துபவரின் தேவைக்கமைய உருவாக்கப்படுகிறது.இதுபோல் ஒவ்வொரு மனிதனதும் ப்ரொகிரமிங் கோட் தான் ஜாதகம். இது எழுதப்படுவது அந்த மனிதனது பூர்வகர்ம விதிக்கமைய, அவ்விதியின் பலாபலன்களை கூட்டிக் குறைத்து நிர்ணயிப்பது நவகோள்கள்.

ஜோதிடத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்க்கு கர்ம விஞ்ஞானத்தினை நன்கு விளங்கிக்கொள்வது அவசியம். கர்மம் என்பது பொதுவாக செயலினைக்குறிக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் உப்புத்தின்றவன் தண்ணிகுடிப்பான் என்பதே சிறந்த உதாரணம். கர்மா என்பது தர்க்கவியலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கை. மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நன்மை தீமை இப்படியான வேற்றுமைகளிற்க்கு என்னகாரணம் என்பதற்க்கு கர்ம விஞ்ஞானம் பதிலளிக்கிறது. இதன் படி ஒருமனிதன் செயலினைச் செய்துவிட்டால் அதற்குரிய பலன் உடனடியாகவே அவனது பேரட்டில் பதியப்படுகிறது, அதன் படி அவன் தனது செயலிற்கான முடிவினை சூஷ்மமாக முடிவு செய்துகொள்கிறான். தனது இச்சா சக்தி தவிர்ந்து எக்காரணம் கொண்டும் அதற்கான‌ விளைவிகளிலிருந்து அவன் தப்பமுடியாதபடி அவனது செயலிற்கான விளைவுகள் அமைந்துவிடுகின்றன. இதனைக் காட்டும் குறிகாட்டிகளாக கிரகங்கள் செயற்ப்படுகின்றன.

அப்படியென்றால் மனிதன் தனது செய்த செயலிற்கான விளைவுகளை மாற்றவேமுடியாதா? முடியும் என்பதுதான் ஜோதிடம், இப்பிரச்சினையினை தெளிவாக விளங்கிக்கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வுக்கருவியாகவும் ஜோதிடம் பயன்படுகிறது. இதனை அறிந்தபின் தமது இச்சாசக்தியால் வலிந்து முயல்வதனால் அதன் தீவிரத்தினைக் குறைக்கலாம் என்பது ஆன்றோரது முடிவு.

இது பற்றி மேலும் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்!

ஜோதிட தத்துவ விஞ்ஞானம் ‍-02

பௌதிகவியலில் எந்த பொருளின் இருப்பை குறிப்பிடுவதற்க்கும் சில கணித ஆள்கூறுகளை பயன் படுத்துவர். ஆள்கூற்றுகேத்திர(geometry)கணிதம் அறிந்தவர்களுக்கு தெரியும் ஒரு பொருளின் இருப்பை குறிப்பிட X, Y, Z என அச்சுகளை பயன்படுத்துவர். பின்பு அதன் அசைவுகளை வரைபுகளில் குறிப்பிடுவதற்கு சார் மாறி,சாராமறி என அதன் தொழிற்பாடுகளை விளங்கப்படுத்துவர். இது போல் பிரபஞ்சம் எனும் வரைபில் மனிதனது இருப்பை, தொழிற்பாடுகளை விளங்கப்படுத்தும் வரைபு முறைதான் ஜோதிடம்.

ஒரு புள்ளியினைச் சுற்றி 360 பாகையிலான வட்டம் காணப்படுகிறது. பூமியினை புள்ளியாக எடுத்தால் ராசிமண்டலம் அதன் சுற்றளவாகின்றது. பூமிக்கும் இந்த ராசி மண்டலத்திற்க்கும் இடையில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய ஏழுகோள்களும் காணப்படுகின்றது. ராகு, கேது என்பன கிரகங்கள் அல்ல, அவை சார்புப் புள்ளிகள்.

இதனை மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள‌ த‌ற்கால விஞ்ஞான ஒப்பீட்டின் மூலமும் அறிந்து கொள்ளலாம். செயற்க்கைக்கோள், விண்ணில் சுழலும் போது எவ்வாறு கீழுள்ள வாங்கி சமிஞ்ஞைகளை பெறுகின்றதோ அது போல் இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் இந்த நட்ச்சத்திர மண்டலங்களிலிருந்து அதற்க்குத்தேவையான இயங்கு சக்திகளைப்பெறுகின்றன. இந்த சஞ்ஞைகளின் அளவுகளை கூட்டி குறைப்பதற்க்கு இடையில் பெருப்பாக்கிகள்(Boosters) காணப்படும். அவைதான் இந்த நவகோள்கள். செயற்க்கைக்கோள்கள் இருக்கும் அமைவிடம், அமைவுக்கோணம், சார்பு, தூரம் என்பவற்றிற்கேற்ப சமிஞ்ஞைகளது தெளிவு மாறுபடுவது போன்று, ஒவ்வொரு மனிதனது குணம், அமைப்பு, வாழ்க்கை என்பன இந்த நட்ச்சத்திர மண்டலத்தினாலும், நவகோள்களினாலும் இருக்கும் ராசிமண்டலம், பூமியின் அமைவிடம், தூரம் என்பவற்றால் அவை தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிரகமும் குறித்த ராசியில் நிற்க்கும் போது பொதுவான ஒரு சமிஞ்ஞையும், நட்ச்சத்திரத்தில் இருக்கும் போது தெளிவான சமிஞ்ஞையினையும் தரும். இதன் படி நமது வாழ்க்கையில், சூழலில் இருக்கும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை நாம் கணித்துக்கொள்ளலாம். தற்போது சூழலியல் ஆய்வுகளிலும், விண்ணியல் மற்றும் பலதுறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் செய‌ற்கைக்கோள் தொழில்நுட்பம் போன்றதுதான் ஜோதிடம். ‌

இந்த ச‌மிஞ்ஞைகளது தெளிவு, தரம் என்பவற்றைக் ஜோதிடத்தில் குறிக்கும் வார்த்தைகள் தான் உச்சம், நீச்சம், நட்பு, பகை, வக்கிரம் என்பன.


ஜோதிட தத்துவ விஞ்ஞானம் - 01

எமது முன்னோர்கள் அறிந்த அரிய விஞ்ஞானத்தில் ஜோதிடமும் ஒன்று. வானத்தினை உற்று நோக்கினால் நட்சத்திரங்கள் குறித்த ஒழுங்கமைப்பில் பரவிக்காணப்படுகின்றன. அவை எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை, பூமி எவ்வாறு கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ அதுபோல் அவையும் நகர்கின்றன‌.

இதுபோல் சந்திரன், இதுவும் தனது தோற்றத்தில் தேய்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கின்றது. வியாழன், வெள்ளி கிரகங்கள் வெற்றுக்கண்ணுக்கு தோற்றுகின்றது. இயற்கையுடன் ஒன்றிய எமது முன்னோர்கள் இவற்றின் அசைவு பூமியில் செல்வாக்கு செலுத்துவதை விஞ்ஞான நோக்கில் அறிந்தனர். உதாரணமாக சந்திரன் வளர்ந்து தேய்வதுடன் கடலின் அலைகளது அளவு மாறுபடுகிறது என்ற உண்மையினை அறிந்தனர். பௌர்ணமி தினத்தில் கடலலை அதிகமாகவும் அமாவாசையில் கடல் வற்றுவதனையும் அறிந்தனர். ஆக சந்திரனது அசைவு, பூமியிலிருந்தான தூரம் என்பவற்றிற்க்கும் பூமியின் நீரின் அசைவிற்க்கும் தொடர்பு இருப்பதனை அறிந்தனர். இதுபோல் வியாழன் குறித்த நட்ச்சத்திரக்கூட்டத்திற்கண்மையில் வரும் பொது மழை அதிகம் கிடைப்பதை அவதானித்தனர். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பதைப் அடிப்படையாக‌ பூமியில் செல்வாக்கு செலுத்தும் கிரகங்கள் மனிதனிலும் செல்வாக்குச் செலுத்துவதை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டனர். இவ்வாறு சிறு சிறு அவதானங்களின் முலம் க‌ருதுகோள்களை உருவாக்கிக்கொண்டு தமது உடல், மனம், செயல்கள் இவற்றினை கிரகங்களின் இயக்கம் பாதிப்பதினை கண்டறிந்தனர். இவையனைத்தும் ஒரு விதிமுறையின் கீழ் நடைபெறுவதினை உணர்ந்தனர். அதனை தொகுத்து விதிமுறையாக்கி அதனை ஜோதிடம் எனப்பெயரிட்டனர். பிரபஞ்சத்திற்க்கும் பூமிக்கும், பிரபஞ்சத்திற்க்கும் மனிதனிற்க்கும் இடையிலான இடைத்தொடர்பு விஞ்ஞானம் தான் ஜோதிடம்.

ஐசேக் நியுட்டன் எப்படி பௌதிகவியல் சிந்தனையை தனது சிறுவயதில்
ஆப்பிள் விழுவதினை அவதானித்து கருதுகோள்களை (hypothesis) உருவாக்கி பரிசோதித்து பௌதிகவியலின் கோட்பாடுகளை (laws) அறியத்தந்தாரோ அதைப்போன்று பல மெய்ஞ்ஞானிகளால் பரிசோதித்து உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் தான் ஜோதிடம்.

இந்த வலைப்பின்னல் பதிவுகளின் நோக்கம் "ஜோதிட தத்துவம்", அதாவது எந்த ஒரு விஞ்ஞானத்திற்க்கும் தத்துவம் அடிப்படைத். தத்துவம் புரிந்தால் பிரயோகம் இலகுவாகும். ஆகவே ஜோதிடத்தின் அடிப்படை தத்துவங்களை திட்ட முகாமைத்துவத்தில் பயன்படுத்தப்படும் "பெரும் பட" (Big picture) முறையின் மூலம் விளங்கிக்கொள்வது தான் நோக்கம். ஆர்வமுடைய அன்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.